நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுபெரியநாயகம் (40), இவர் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த சந்தனமேரிஜான்சி 35 என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை பேரு இல்லாததால், குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை எழுந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, சந்தனமேரிஜான்சி வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் இருவரையும் அழைத்து நேற்று அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று சந்தனமேரி ஜான்சி விஷம் அருந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தில் வசிப்போர் அவர்களது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தனமேரி ஜான்சியின் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர் அவரை பார்த்த பொழுது முகம் மற்றும் கழுத்து பகுதியில் காயம் இருந்துள்ளது.பெற்றோர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜான்சியும் உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்சியின் தந்தை பெரியநாயகம்ராஜ், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கூடிய சந்தன மேரி ஜான்சியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு காரணமான ஏசு பெரியநாயகத்தை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சந்தன மேரி ஜான்சி உயிரிழந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார். வேளாங்கண்ணி அருகே குடும்பத்தகராறில் மகளை கொன்று விட்டதாககூறி, மருமகன் மீது, மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, உடலை வாங்க மறுத்துள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.