Skip to content
Home » நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவதும் மக்களை தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரிய சூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பிரசாந்த் என்ற நபரை குடியிருப்பின் அருகே உலா வந்த காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காட்டு யானையை விரட்டி பிரசாந்தை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் காட்டு யானை தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரசாந்த் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!