மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவர்ம குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் அறிவித்தார். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 8ம் தேதி (இன்று) தொடங்கும் எனவும் சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்குகிறது.
இந்த விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இந்த விவாதத்தின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசு தரப்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரும், 5 எம்.பி.க்களும் விளக்கம் அளிக்க உள்ளனர். 5 எம்.பி.க்களில் பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு இவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடனே மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.