சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது. இங்கு பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே கடையில் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1187 உணவகங்களில் கடந்த 19ம் தேதி உணவுப் பாதுகாப்புத்துறை (அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 1024.75 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி அழிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த 115 உணவகங்களிடம் இருந்து மொத்தமாக 1.61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் ஓட்டல்களில் விரும்பி சாப்பிடும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.