அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 24ம் தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னரில் தனது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் ஏற்பாடு செய்து இருக்கிறார். இந்த கூட்டத்தில் அதிமுக கட்சி கொடியினை பயன்படுத்தக்கூடாது என அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி போலீஸ்சில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் ஏற்பாடுகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் கு.ப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு பின்னர் பேட்டி அளிப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வைத்தியலிங்கம் வர தாமதம் ஆவதால் குபகிருஷ்ணன் மற்றும் வெல்லமண்டிநடராஜன் ஆகியோர் பார்வையிடுவார்கள், வைத்தியலிங்கம் அதற்குள் வந்து விடுவார் என கூறப்பட்டது. ஆனால் கு.ப கிருஷ்ணன் திடீரென பத்திரிக்கையாளர்களிடம் பேச ஆரம்பித்தார். வைத்தியலிங்கம் வருவதற்குள்ளாக குப கிருஷ்ணன் பிரஸ் மீட்டை துவக்கி விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெல்லமண்டி நடராஜன் வேறு வழியில்லாமல் அமர்ந்து இருந்தார். பேட்டி முடியும் சூழ்நிலையில் தான் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வைத்தியலிங்கம் வந்தார். அவர் வந்து அமர்ந்தவுடன் பிரஸ் மீட் முடிந்தது. இதனால் வைத்தியலிங்கத்தின் முகம் மாறியதை பார்த்த வெல்லமண்டி நடராஜன் தர்மசங்கத்தில் இருந்தார். உடனடியாக அவர் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு அண்ணன் பேசுவார் என கூறி வைத்தியலிங்கத்தை வைத்து மீண்டும் ஒரு முறை பிரஸ்மீட்டை நடத்தினார். இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஓருவர் கூறுகையில் ஓபிஎஸ்சை பொருத்தவரை டெல்டா மாவட்டங்களை அண்ணன் வைத்தியலிங்கம் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வருவதற்குள் கு.ப கிருஷ்ணன் பேட்டி அளித்து தவறு. திருச்சியை பொருத்தவரை கு.ப கிருஷ்ணன் தான் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இந்த விஷயத்தில் வெல்லமண்டி நடராஜனும் வருதத்தில் தான் உள்ளார் என்றார்..