Skip to content
Home » பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

  • by Senthil

பெரம்பலூரில் உள்ள பிரபல கல்வி  நிறுவனமான  தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும்  பணியாற்றி வந்தார். இவர்  பள்ளி விடுதியிலேயே தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

கடந்த 24ம் தேதி விஜயதசமி  பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட  சுபா ஆடலரசியை மதியத்திற்கு பிறகு காணவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று சுபா ஆடலரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுபா அறையில்  இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி,  கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சுபா ஆடலரசி உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்,அவருக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுபா ஆடலரசி தற்கொலையில் மர்மம் உள்ளதாக அவரது தாயார் அமுதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார்.

அந்த புகாரில் கடந்த 16-ம் தேதி என் மகன் திருமணத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு  சுபா ஊருக்கு வந்தார். 20 -ம் தேதி என் மகன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் என் மகள் சுபாவுக்கு  20-ம் தேதி தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது .அதனால் 21-ம் தேதி பெரம்பலூர் வந்துவிட்டதாகவும் 23- ம் தேதி எனது மூத்த மகள் சாமுண்டீஸ்வரியிடம் பேசிய பிறகு என் மகளிடமிருந்து எந்த போன்காலும் வரவில்லை இந்நிலையில்  பெரம்பலூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது .அதில் என் மகள் சுபா ஆடலரசி பணி புரியும் பள்ளியில்  தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

ஆனால் என் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. இதில் ஏதோ மர்மம் உள்ளது என் மகளுக்கு தொடர்ந்து போன் செய்தது யார் ?என் மகளை மட்டும் பள்ளி நிர்வாகம் போன் செய்து அழைத்ததற்கு காரணம் என்ன.  என் மகள் இறப்புக்கு சரியான நீதி வேண்டும். அவள் தங்கி இருந்த தளத்தின்  சிசிடிவி புட்டேஜ் வேண்டும். மேலும் அவளது போனில் யார் யார் பேசி இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் போலீசார்  தெரிவிக்க வேண்டும்.  அவளை விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும்படி அழைத்தது யார் என தெரியவேண்டும்.

மேலும் என் மகள் உடலை உடற் கூறாய்வு செய்யும்போது எங்களது  தரப்பிலும் ஒரு மருத்துவர்,  வக்கீல் , வீடியோ கிராபரை அனுமதிக்க வேண்டும்.  அப்போது தான்  உடலை பெற்றுக்கொள்வோம் என கூறினர்.  எனவே நேற்று  உடற் கூறாய்வு நடைபெறவில்லை. இன்று உடற்கூறாய்வு நடைபெறும் என தெரிகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார்  சுபாவின் பெற்றோரிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!