கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
“பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார்.நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு ஷோ – வாகன பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்கு மேல் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரவு சென்னையில் தங்கும் பிரதமர், மறுநாள் காலை வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அவர்களையும் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் அவர்களையும் ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து கோவை வரும் பிரதமர் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை, மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார்.
மீண்டும் 12ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் தமிழகம் வரவுள்ளார். அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்பரை மேற்கொள்ள உள்ளார்” என அண்ணாமலை தெரிவித்தார்.