சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக அரசால் போடப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யும்போது இந்த வழக்கில் பொன்முடி ரூ.4.80 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. பொன்முடியின் மனைவி விசாலாட்சி கடலூரில் டூவீலர் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். வருடம் ரூ.5 கோடிக்கு மேல் அதில் விற்பனை நடைபெற்று வந்து உள்ளது. அத்துடன் பொன்முடிக்கு குடும்ப சொத்து மட்டும் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது சகோதரர் தொழில் தொடங்க பணம் கொடுத்து உள்ளார். இவை எல்லாம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
பொன்முடியின் மனைவி சரியான நேரத்தில் வருமான வரி கணக்கு ரிட்டன் பைல் பண்ணவில்லை என்பதால் அவரது வருமானத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதிபதி இந்த தீர்ப்பிளை அளித்து உள்ளார். பொன்முடியின் மனைவி டூவீலர் விற்பனை நிலையம் மூலம் ரூ.5 கோடி வருமானம் வந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது தெரிவிப்போம். 30 நாளில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி மேல்முறையீடு செய்து அவருக்கு விரைவில் விடுதலை பெற்றுத் தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.