உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு, சென்னை ஐகோர்ட் விதித்த 3 வருட சிறை தண்டனையால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை நிறுத்தி வைத்தனர். இதனால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு உயர்கல்வி்த்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு கடிதம் எழுதினார். உடனடியாக டில்லி சென்ற கவர்னர் ரவி, 3 நாள் அங்கு முகாமிட்டு விட்டு வந்தார். பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று முதல்வருக்கு பதில் அனுப்பினார்.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் கவர்னர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இன்று பரபரப்பான உத்தரவு அளித்தார்.அதி்ல் கூறியதாவது:
இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். ஆளுநர் பதவி அடையாளத்துக்கு மட்டுமே. நாளைக்குள் சாதாகமான பதில் தெரிவிக்காவிட்டால், உச்சநீதிமன்றமே கவர்னருக்கு உத்தரவிடும். நாளை இதில் உத்தரவு பிறப்பிக்கிறோம். குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பது ஏன்?ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா? இந்த விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தீவிரமான கருத்துக்களை சொல்வோம். இதை கவர்னரிடம் சொல்லுங்கள்.
இவ்வாறு கடுமையான உத்தரவை தலைமை நீதிபதி அளித்தார். இதனால் இன்று இரவுக்குள் கவர்னர் பதில் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.