Skip to content
Home » பூண்டிமாதா பேராலய தேர்பவனி….நாளை நடக்கிறது

பூண்டிமாதா பேராலய தேர்பவனி….நாளை நடக்கிறது

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற  பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தினமும் மாலை சிறு சப்பரபவனியும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.இன்று(சனிக்கிழமை) மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத் தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் ஆகியோரை நினைவு கூர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படும்.

மாலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா- அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

திருப்பலி முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு வண்ண மின்விளக்குளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடக்கிறது. கும்பகோணம் பிஷப் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். தேர்பவனி தொடங்கியதும் சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய நிர்வாகம் செய்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!