தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. ஏராளமான கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதி அடைந்த ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கம், வெனிசுலா எல்லை மற்றும் ஈக்குவெடாரிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் விமானப் பயணத்தில் பரவலான இடையூறு ஏற்பட்டது. மேற்கு கொலம்பியாவில் உள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. நிலநடுக்கத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்தனர். மேலும் 570 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு தழுவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்கவும், மீட்புப் பணிகளுக்கு உதவவும் தேவையான அனைத்தையும் அரசு செய்யும் என ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா உறுதி அளித்துள்ளார். நிலநடுக்கத்தால் 61 கட்டடங்கள் இடிந்து விழுந்தன; 1,575 வீடுகள் சேதமடைந்தன. 18 சுகாதார மையங்கள், 52 கல்வி நிறுவனங்கள், 17 சமூக மையங்கள் மற்றும் 18 சாலைகளும் பாதிக்கப்பட்டன. கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
