மாட்டுப்பொங்கலையொட்டி மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மாலை 3.45 மணி வரை 8 சுற்றுகள் போட்டி முடிவடைந்து 9ம் சுற்று போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 சுற்றுகளிலும் 717 காளைகள் களம் கண்டன. 9வது சுற்றிலும் 50 பேர் களம் இறங்கினர். 8 சுற்றுகளிலும் பிரபாகரன் என்ற வீரர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். சின்னப்பட்டி தமிழரசன், பாண்டீஸ்வரன் என்ற வீரார்கள் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுபோதை உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 32 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். காளைகள் முட்டி தள்ளியதில் ஒரு எஸ்.ஐ., பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இவர்களில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடிக்கும் வீரருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் ஒரு கார் பரிசு வழங்கப்படும். அந்த கார் பிரபாகரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் மாலை 4 மணி வரை 530 காளைகள் களம் கண்டன. காளைகள் முட்டியதில் 2 எஸ்.ஐ, 4 காளைகளின் உரிமையாளர்கள், வீரர்கள் உள்பட 40 வீரர்கள் காயமடைந்தனர்.