காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், 1,700 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து 1,823 கோடி ரூபாய் கட்ட சொல்லி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.காங்கிரஸ் கட்சி 1,823 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை வருமானவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி
மற்றும் அமித்ஷா ஆகியோரது புகைப்படங்களை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்களின் படங்களை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சியினர், பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் தீயிட்டு கொளுத்திய புகைப்பட காகிதங்களை காங்கிரஸாரிடமிருந்து பறிக்க முற்பட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும்,போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு, வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தை காவல்துறை தடுப்பதாக கூறி திடீரென காங்கிரஸ் கட்சியினர் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் போராட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளோம், சாலை மறியலுக்கு அனுமதி இல்லை என கூறி அவர்களை அங்கிருந்து அலோக்காத தூக்கி அப்புறப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.