மக்களவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் ராகுல் காந்தி இன்று டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது பிரதமர் மோடி பற்றிய விவாதம் அல்ல. மணிப்பூரை பற்றியது. மணிப்பூர் மக்களிடம் பிரதமர் பேச வேண்டும். மணிப்பூரில் அரசு கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதை மாநில முதல்வரால் தடுக்க முடியவில்லை. பிரதமர் , ஒரு கட்சி தலைவர் போல அரசியல் செய்யக்கூடாது. எதிர்க்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம் எங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது.
மணிப்பூர் இன்று ஒரே மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலமாக பிளவுபட்டு நிற்கிறது. பிரதமரின் கைகளில் பல சாதனங்களும், கருவிகளும் உள்ளன. ஆனால் அவற்றை அவர் பிரயோகிப்பதில்லை. மணிப்பூரில் கொலைகள், பாலியல் குற்றங்கள் நடக்கிறது. மணிப்பூர் பற்றி எரியவேண்டும் என பிரதமர் நினைக்கிறார். மணிப்பூரில் நான் பார்த்தது, கேட்டது எல்லாம் அசாதாரணமானது.
மணிப்பூர் கலவரத்தை இந்திய ராணுவம் 2 நாளில் அடக்க முடியும். என்னுடைய முகத்தை தொலைக்காட்சியில் பார்க்க மோடி விரும்பவில்லை. பாரத அன்னை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து போராடுவேன்.
இவ்வாறு அவா் கூறினார்.