Skip to content
Home » ராமர் கோவில் குடமுழுக்கு… கூட்ட நெரிசலை தவிர்க்க அயோத்தி வர வேண்டாம்..

ராமர் கோவில் குடமுழுக்கு… கூட்ட நெரிசலை தவிர்க்க அயோத்தி வர வேண்டாம்..

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்திக்கு 1,000 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் சுமார் 100 நாட்களுக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது… “அயோத்தி ராமர் கோவில் கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோவிலில் நிறைய சிறிய சிறிய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சிறிய பணிகள் தொடரலாம். இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் திறப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி  அயோத்திக்கு வர வேண்டாம். உங்களுக்கு அருகில் உள்ள சிறிய அல்லது பெரிய கோவிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும், உங்களால் இயன்ற கோவிலுக்குச் செல்லுங்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!