தமிழகத்தில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில்ஸ்ரீரங்கம் வீதிகளில் வந்தபோது அவருக்கு ஸ்ரீரங்கம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், வாழ்த்து முழக்கமிட்டும் வரவேற்றனர். காரில் கதவை
திறந்தபடி நின்று கொண்டே வந்த பிரதமர் மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தார். பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் கைகளை அசைத்தவாறு வந்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திய பிரதமர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கம்ப ராமாயண பாடல்களை கேட்டார். பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் கைகளை அசைத்தவாறு சென்றார்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்றடைந்தார். சாலையின் வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவி தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, ராமர் பாதத்தையும் தரிசிக்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரத்தில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.