அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தலைக்கவசம் உயிர்கவசம், தலைகவசம் அணிவீர்! உயிரிழப்பை தவிர்ப்பீர்!!!, ஹெல்மேட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்பாதுகாப்பு!, சாலையில் அலைபேசி! ஆபத்தாகும் நீ யோசி!, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்!, மிதவேகம் மிக நன்று, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதே!, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு!!, சாலை விதிகளை பின்பற்று விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கு, சீட்பெல்ட்டை அவசியம் அணியவும், முந்துவதில் கவனம் தேவை, பாதுகாப்பான இடைவெளி அவசியம், போக்குவரத்து சின்னங்கள் பின்பற்றுவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இப்பேரணியில் பங்கேற்றவர்கள் இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரை பணயம் வைக்காதே, போதையில் பயணம் பாதையில் மரணம், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.
இதேபோன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அலுவலர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக இப்பேரணியில் கலந்து கொண்டு மது
அருந்துவதால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மதுவால் உண்டாகும் மனநலக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இப்பேரணியில் சுமார் 250 நபர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையலத்தில் கனரக வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நெடுஞ்சாலை பணியாளர்கள், மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உதவி பொறியாளர் சிட்டிபாபு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவ, வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.