Skip to content
Home » சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

  • by Senthil

தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத குழிகளில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து மற்றும் கேஸ் சிலிண்டர் லாரி

கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படுவதில்லை என்ற புகார்களும் அவ்வப்போது எழுகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் போத்தனூர் ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் 4 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து சரிவர மூடப்படாத பள்ளத்தில் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதை அடுத்து பேருந்தில் இருந்தா பயணிகள் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.

அதேபோல் போத்தனூர் பகுதியிலேயே நஞ்சுண்டாபுரம் சாலையில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் கேஸ் சிலிண்டர் லாரி ஒன்று சிக்கிக்கொண்டது. இதனால் குறுகலான அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில் பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் பெரும்பான்மையான வாகனங்கள் நஞ்சுண்டாபுரம் போத்தனூர் வழியே தான் செல்கின்றன. இத்தகைய சூழலில் நஞ்சுண்டாபுரம் சாலை, போத்தனூர் பகுதிகளில் பெரிய வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நஞ்சுண்டாபுரம் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படுவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!