திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (28). 7 வருடங்களாக தற்காலிக பணியிலும், ஒரு வருடமாக நிரந்தர பணியிலும் பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் வடக்கு தெரு மங்கம்மாபுரத்தை சேர்ந்த ஜெகன் நேற்று இரவு கோவில் பணியில் அலுவலகத்தில் இருந்தார்.
மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு கோவிலுக்கு செல்லும் அடிவாரப் பகுதியில் யானை கட்டும் இடத்தின் எதிரே கோவில் அலுவலகம் உள்ளது.இன்று அதிகாலை கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கோவிலுக்கு வந்த போது அலுவலகத்தில் ஜெகன் பிணமாக தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கோவில் அலுவலர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ஊழியர் அலுவலக பணி அழுத்தும் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டதால் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை செய்து விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.