தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி. இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு பிரதீப் வீட்டில் இருந்போது அவரை 3 வாலிபர்கள் வந்து அழைத்துள்ளனர். வீட்டிற்குள் இருந்து பிரதீப் வெளியே வந்துள்ளார். அவரிடம் அந்த 3 வாலிபர்களும் ஏதோ விபரம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த 3 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பேரும் பிரதீபின் முகத்தை சிதைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரதீப் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரதீபை வெட்டி கொலை செய்தது கரந்தை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (26), கீழ அலங்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவக்குமார் (25), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.