Skip to content
Home » ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

  • by Senthil

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  நாளை திருச்சி வருகிறார்கள்.  பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலைய 2 வது முனையத்தை திறந்து வைப்பதுடன்,  பாரதி தாசன் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு  பட்டங்களையும் வழங்குகிறார்.

மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் டில்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பிறகு, கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.   இதற்காக விமான நிலைய வளாகத்தில்  10 ஆயிரம் பேர் அமரும் வகையில்  பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய முனைய திறப்பு விழாவிலேயே  பிரதமர் மோடி பல்வேறு  பணிகளை தொடங்கி வைக்கிறார்.  திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை – தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி – மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் – தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இவைதவிர, 5 சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை அடுத்த கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார். இவ்வாறு, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு மதியம் 1 மணியளவில் தனி விமானத்தில்,  கேரளா அருகே உள்ள லட்சத்தீவுகள் செல்கிறார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!