கடை வாடகை கட்டமுடியாமல் ஓனரின் மனைவியை கொலை செய்து நகைகளை திருடி சென்ற சலூன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கையபாலம் சீனிவாசன் நகரில் உள்ள பிஆர்கே நாகா ஆனந்த் அடுக்குமாடி குடியிருப்பில் பில்லா பார்வதி (53) சந்திரசேகர் தம்பதி வசித்து வந்தனர். சந்திரசேகர் அக்கையபாலத்தில் பான் மசாலா கடை நடத்தி வருகிறார். பார்வதி ஐதராபாத்தில் தன்னுடைய மகன், மருமகள் ஆகியோரின் வசித்து வந்த நிலையில் அவ்வப்போது விசாகப்பட்டினம் வந்து கணவருடன் இருப்பது வழக்கம். அவ்வாறு விசாகப்பட்டினத்திற்கு கடந்த 12 ம் தேதி வந்து கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சந்திரசேகருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து அதில் சலூன் கடை நடத்தி வரும் தாடிசெட்லபாளத்தை சேர்ந்த கன்னவரபு ராமு (53) கடந்த ஆறு மாத காலமாக கடைக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார் . இது தொடர்பாக ராமு, சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து பார்வதி வந்து தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து கடந்த14 ம் தேதி மாலை சுமார் 6.20. மணியளவில் பார்வதி வீட்டிற்கு சென்ற ராமு பார்வதியின் கை கால்களை சேலையால் கட்டிப்போட்டு மிரட்டி பீரோ சாவியை வாங்கி அவரது 7 சவரன் நகைகளை திருடி கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பி சென்றார். கணவர் சந்திரசேகர் வீட்டிற்கு இரவு வந்து பார்த்தபோது மனைவி கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் குற்றப்பிரிவு மற்றும் தடயவியியல் நிபுணர்கள் குழுவினர் அடுக்குமாடிக் குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமு வந்து சென்றதை அடையாளம் கண்டனர். ராமு கொலைக்கு பிறகு திருடிய தங்கத்துடன் ஐதராபாத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை மாலை விசாகப்பட்டினம் ரயில் நிலைய நுழைவாயிலில் அவரைத் துரத்தி சென்று பிடித்தனர். ராமு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் கடைக்கு மூன்று மாத வாடகை பாக்கி இருந்ததால் பார்வதி தொடர்ந்து பணம் கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இதனையடுத்து ராமுவை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
