திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா சிறப்பு வாய்ந்தது. வரும் 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தைப்பூச விழா தொடங்குகிறது.
அன்று காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் பின்பு எழுந்தருளுகிறார். இதனையடுத்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
பின்னர் தைப்பூச திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது .
10 ம் நாளான 25 ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வட காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் 26 ம் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது .தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆனையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.