Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4 ம் நாளில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.இந்நிலையில் 11 நாட்கள் நடைபெறும் இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது .

10 ம் நாளான வருகின்ற 25 ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26 ஆம் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார் அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் 4 ம் நாளில் உற்சவ அம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது. தொடர்ந்து அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்த்களர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆனையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!