Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.  ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும் ஆடி மாதத்தில் எந்த நாளில் விரதமிருந்து வழிபட்டாலும் அது சிறப்பான பலனை தரும். ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படுவதால் இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டினை முறையாக மேற்கொண்டால் நினைத்த காரியம் நடக்கும்.

வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனின் அருளை பெறுவதற்கு ஏற்ற மாதமாகும் என்பதாலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய நாட்களில் அம்மனை வழிபடுவது சிறப்பானதாகும்.இந்நிலையில் இன்று 3 வது ஆடி வெள்ளியை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சமயபுரத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும் பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும்,முடி காணிக்கை செலுத்தி வந்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!