மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்குள் இருந்தால் விமர்சிக்க மாட்டோம். கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தவறு இருந்தால் விமர்சிப்போம். கூட்டணிக்குள் இருக்கும்போதே உள்ளடி வேலையில் ஈடுபட மாட்டோம். கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது தவறானது.
தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்கள் இருந்தால் அதை கண்டிப்பாக விமர்சிப்போம். நீங்கள் சசிகலா காலில் விழுந்த படத்தை காட்டி உதயநிதி விமர்சிக்கிறாரே என்ற கேள்விக்கு, விமர்சிக்கட்டும், பெரியவங்க காலில் விழுந்து ஆசி வாங்குவதில் தப்பில்லை. நான் 3வது நபரின் காலில் விழவில்லையே? என்றார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, மோடியிடம் நேரில் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பிரதமர் மோடிக்கு கருப்புக்குடை பிடிக்காமல் வெள்ளைக்குடையை பிடிக்கின்றனர். திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமரை தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். பின்னர் விமர்சிக்கின்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பி.எஸ். பெயரில் 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளது குறித்து நான் எப்படி கருத்துக்கூற முடியும். ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் 5 பேருமே தகுதியானவர்களே.எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. ,இதற்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. தோல்வி பயத்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அ.தி.மு.க குறித்து அவதூறாக பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.