நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தனியார் துணிக்கடையை திறந்து வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும். ஏனென்றால் அரசு பள்ளி மாணவர்களால் வெளியே தனியாரிடம் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது என்றார் அமைச்சர்.