Skip to content
Home » வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார். தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் அடுத்த மாதம் நடைபெறும் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ம் தேதி முதல் போராட்டத்தில் குதித்தனர்.

இதனை தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கடந்த 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட 8 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!