ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா முக்கியமானது. இதற்கான கொடியேற்று விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. பங்குனி தேரோட்ட விழாவின் 2ம் நாளையொட்டி நேற்று நம்பெருமாள் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்துக்கு புறப்பட்டார். அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை உள்ளிட்ட இடங்களில் நம்பெருமாள் வழிநடை உபயம் கண்டருளினார். அங்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் ஜீயபுரம் காவிரி கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். அங்கு இன்று மாலை வரை அவர் சேவை சாதிக்கிறார். ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து நம்பெருமாளை வழிபட்டு வருகிறார்கள். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மேலூர் வழியாக வழிநடை உபயம் கண்டு இரவில் நம்பெருமாள், ஶ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானத்தை அடைகிறார்.