ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து திருவரங்கம் கோயிலிலுக்கு ஆண்டாள் மாலை, பட்டு வஸ்திரம் இன்று வழங்கப்பட்டது. திருச்சி மே 13 -திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொ டுத்த மலர் மாலை, வஸ்திரத்தைஅணிந்து கொண்டு தேரில் ரெங்கநாதர் எழுந்தருள்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நாளை 14ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம், மாலையை திருவரங்கத்திற்கு அனுப்பும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் பட்டு வஸ்திரங்கள், மாலை அணிவிக்கப் பட்டன. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பட்டு வஸ்திரங்கள், ஆண்டாள் கிளி, மாலை ஆகியவை கூடையில் வைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து திருவரங்கத்திற்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டு வஸ்திரங்கள் திருவரங்கத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை வந்து சேர்ந்தது.
