எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.
எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, இந்திய கடற்படையினர் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா முதல் குஜராத் வரை 7500 கிலோமீட்டர் செல்லும் இந்திய கடற்படையின் ஒரு குழுவினர் விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று நாகப்பட்டினம் வந்தனர்.
இந்திய கடற்படை கமாண்டர், உத்ரஜித் பட்டாச்சாரியார் தலைமையிலான 36 பேர் கொண்ட குழுவினர், ஆரியநாட்டுத்தெரு துறைமுக கடற்கரையில் கிடந்த நெகிழிகளை பைகளில் சேகரித்து அங்கிருந்து அதனை அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து
அப்பகுதி மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம், கடற்கரை பகுதிகளில் நெகிழிகளை வீசி செல்ல வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் நாகை சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், அங்கு சுனாமியால் பெற்றோர்களை இழந்த 60 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கல்விக்கு தேவையான பேனா, பென்சில், நோட் , சாட் உள்ளிட்ட எழுதுகோல் பொருட்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையினர் நாகையிலிருந்து புறப்பட்டு, திருநெல்வேலிக்கு சென்றனர்.
இந்திய கடற்படையின் பெருமைகளையும், வீரதீர செயல்களையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில், வழி நெடுகிலும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் மீனவ கிராமங்களில் சுற்றுச்சூழல் குறித்தும் நாட்டின் பெருமைகள் குறித்தும் இந்திய கடற்படையினர் எடுத்துரைக்க உள்ளதாக அதன் கமாண்டர் உத்ரஜித் பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார்.