டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு; நீட் ரத்து, NTA கலைப்பு, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகல், புதிய கல்விக் கொள்கை வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் CITU, DYFI கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் (CITU) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வரும் டெல்லி காவல்துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) உடனடியாக கலைக்கப்பட வேண்டும், புதிய கல்விக் கொள்கை (NEP 2020) திரும்பப் பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
