மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலையத்திற்கு வந்த சந்திரபாடி மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் படகை தங்களிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து நேற்று இரவு தரங்கம்பாடியில் நடைபெற்ற 18 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி 6 மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகவும் அதுவரை தொடர் தொழில் மறியலில் ஈடுபடுவதாக எடுக்கப்பட்ட முடிவின்படி 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.