வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் மேலும் நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.