புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளதால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வராது. தொழிலாளர்களின் பிரச்சனை என்பது வேறு அரசியல் கூட்டணி என்பது வேறு.
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி இறந்தபோது அனுதாப ஆலையால் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தது. பின்னர் காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார். அப்போது பிரதானமாக எதிர்க்கட்சித் தலைவரே உட்கார வேண்டியவனே நான் தான். அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக தான் கேகேஎஸ்எஸ்ஆர்- ஐ அவர்களது பக்கம் ஜெயலலிதா இழுத்துக் கொண்டார். கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கும் கீழ் குறைவான இடங்களை பெற்றுக் கொண்டு ஒரு கட்சி இருக்கிறபோது கட்சியின் நிலை தேக்கத்தில் இருக்கத்தான் செய்யும். அது காங்கிரஸுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தான். பாஜக அதிமுகவை விட்டு தனித்து நிற்க வேண்டிய அவசியம் என்னவென்றால் தனியாக தேர்தலை சந்தித்து வாக்கு சதவீதத்தை காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள், அது அவர்களது கட்சி வளர்ச்சிக்காக செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் தற்போது ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை அதற்கான காங்கிரஸின் வளர்ச்சியும் இல்லை, அதனால் நல்ல கூட்டணியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது” என்றார்.