தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக கவர்னர் மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம் சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை மூலம் திமுக நிர்வாகிகளை மிரட்டி பல்வேறு வழக்குகள் போட்டு திமுகவினர் மக்களவை தேர்தலில் செயல்பட முடியாத நிலை ஏற்படும் நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்ததாக கூறி அமலாக்கத்துறையினர் தமிழக ஆறுகளில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக10மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஏஎஸ் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்க முடியுமா என்ற சட்டச்சிக்கல் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுரங்கம் மற்றும் தாதுக்கள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிஎம்எல்ஏ வரம்புக்குள் வராது. எனவே தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில் மத்திய அரசு அமலாக்கத்துறை நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
இந்த மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.