தஞ்சை அருகே வல்லத்தில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் திலகம் உத்தரவின் பேரில் வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், டாக்டர் மோகன்ராஜ், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சுகாதார அலுவலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வல்லம் கொட்டாரம் தெரு பகுதியில் நேற்று திடீர் சோதனை மேற் கொண்டனர் .
அப்போது அப்பகுதியில் ஆர்ஐஎம்பி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி டாக்டர்களை கண்டுபிடித்தனர். முறையே அவர்கள் வல்லம் மின்நகரை சேர்ந்த ராமானுஜம் (70) மற்றும் கொட்டாரத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (53) என தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜம், ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.