Skip to content
Home » தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை (56) சந்தித்தனர்.

அப்போது ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு முனியாண்டி கேட்டுள்ளார். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது எனக் கூறிய மருத்துவமனை அலுவலர்களிடம், ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.14 ஆயிரம் தருமாறு முனியாண்டி கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை அலுவலர்கள் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீஸ் டிஎஸ்.பி., நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, அருண்பிரசாத் ஆகியோர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மறைந்து இருந்தனர்.

அப்போது முனியாண்டி கூறியபடி, மருத்துவமனை அலுவலர்கள் பழைய பஸ்ஸ்டாண்டுக்கு வந்து ரூ.14 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். அதை வாங்கிய மாவட்டத் தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பிடித்து கைது செய்து, அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!