தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை, தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகள் வைஷ்ணவி (22). இவர் நர்சிங் படிப்பு முடித்துள்ளார். தற்போது கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களாக நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த மருத்துவமனையில் மாடியில் ஊழியர்களுக்கான அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த மற்றொரு பெண் விடுப்பில் ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வைஷ்ணவி இரவு பணியை முடித்து விட்டு அறைக்கு சென்றுள்ளார்.
வைஷ்ணவியின் அறை காலை வெகு நேரமாகியும் திறக்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வைஷ்ணவி தனது துப்பட்டாவால், துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடன் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைஷ்ணவி உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.