Skip to content
Home » தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இத் தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் செல்கின்றனர். அதேபோல் இந்த சாலை வழியாக மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமானோர் இந்த சாலை வழியாகத்தான்

செல்கின்றனர். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்கிறது. இப்படி மழை பெய்யும் போதெல்லாம் இந்த சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் தஞ்சை நகரில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.

அப்போது பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்துவர்கள் மாற்று வழியில் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மழை பெய்யும் நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் சாலையில் உள்ள பள்ளங்களை கடந்து செல்ல வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!