தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு (50). இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நிலத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பம் செய்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சங்கீதா (43) இதற்காக பரிந்துரை செய்ய ரூ. 3000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சந்திரபாபு தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்பேரில், சங்கீதாவை பார்க்க ரூ. 3000 பணத்துடன் சந்திரபாபு சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா பணத்தை சந்திரபாபுவிடம் லஞ்சமாக வாங்கியபோது கையும் களவுமாக போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, சங்கீதாவிற்கு ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7ன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதம் மற்றும் பிரிவு 13 (1) (d) உடன் இணைந்த 13 (2)ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 3000 அபராதமும் விதித்தார்.