பெங்களூரு நகரின் மடிவாளா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் அறைக்குள் நுழைந்த 4 பேர், தங்களைப் போலீசார் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி வியாபாரிகளிடமிருந்து ரூ.20 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து வியாபாரிகள் மடிவாளா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விடுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியின் அரசு ஜீப்பில் வந்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியே இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டுத் தனது கூட்டாளிகளை அனுப்பிப் பணத்தைப் பறித்தது அம்பலமானது. தலைமறைவாக இருந்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரி, அவரது கூட்டாளிகளான குபேந்திர ரெட்டி, வசந்த் குமார் உள்ளிட்டோரை மடிவாளா போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
