அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்
திருச்சி, ஜூன் 3– திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில், கட்டிடமும் சிதிலமடைந்ததால், 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அவலநிலை ஏற்பட்டது.இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அருகாமையில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக புதிய கட்டிடம் கட்டும் பணி டெண்டர் விடப்பட்டப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டி பூமி பூஜைக்கு இடம் சுத்தம்படுத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி தரப்பைச் சேர்ந்த சிலர் பள்ளி இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக இரவோடு இரவாக கல்போட்டு முள் கம்பி போடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதையறிந்த, திருவெறும்பூர் பிடிஓ மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, பள்ளி இடத்தை கல் ஊன்றியது யார் என விசாரணை நடத்தினர். அதில், ஆளும்கட்சி தரப்பை சேர்ந்த சிலர் பள்ளி இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த நபர்களிடம் விசாரித்தால், மழுப்பலாக பதில் கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, கலெக்டருக்கு அறிக்கையாக அனுப்பி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் திருவெறும்பூர் தாசில்தார் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளும் கட்சி தரப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் செயல் மற்ற கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆக்கிரமிக்க முயற்சிக்கும் பள்ளி இடத்தை மீட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பதே அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
