புனேயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வாலுக்கும் (26), சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாட கேதனை லோஹாகாட் கோட்டைக்கு சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள செங்குத்தான பாறையிலிருந்து கேதன் தவறி விழுந்துவிட்டதாகச் சியா முதலில் நாடகமாடினார். 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கேதனின் சடலம் மீட்கப்பட்டது.
கேதனின் குடும்பத்தினர் அளித்த சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சியா கோயல் தனது காதலன் பாபுலால் சவுத்ரியுடன் (22) சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கேதனை மலையிலிருந்து தள்ளிக் கொன்றது அம்பலமானது. கேதனுக்கு இருந்த லேசான முடி உதிர்வுப் பிரச்சினை காரணமாகச் சியா அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலளித்த கேதனின் தந்தை, “முடி உதிர்வுப் பிரச்சினை பற்றி முன்கூட்டியே பெண்ண வீட்டாரிடம் கூறிவிட்டோம்; சியாவிற்கு இதில் விருப்பமில்லை என்றால் என் மகனைக் கொல்வதற்குப் பதிலாகத் திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே” என வேதனை தெரிவித்துள்ளார். கைதான சியா மற்றும் அவரது காதலனுக்கு ஜூன் 29 வரை நீதிமன்றம் போலீஸ் காவல் விதித்துள்ளது.
