மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் திருமங்கலம் தொகுதியில் உள்ள கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அவருக்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் விஜயபிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் பின் அந்த சிலைகளுக்கு முன் வெற்றி பெற விஜய பிரபாகரன் பிரார்த்தனை செய்தார்.
மக்களுக்காக வெற்றி பெற்று சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆளும் திமுக அரசு எத்தனையோ வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றாமல் உள்ளது. நம்முடைய இலக்கு 2026 தான். அதற்காக நம்முடைய தொடக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் தொடங்கியுள்ளது.
என்னை நீங்கள் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன் என என் தாயிடம் கூறியதால் எனக்கு இந்த தொகுதியில் சீட்டு கொடுத்துள்ளார். விஜயகாந்த் மறைவிற்குப் பின் என் தாய் தான் கூட இருக்கிறார். அதே போல் நீங்களும் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 19 வரை நீங்கள் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு நானும், ஆர்.பி. உதயகுமாரும் பார்த்துக் கொள்கிறோம். துளசி கூட வாசம் மாறும். ஆனால், இந்த தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்” என்றார்.