பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் கடந்த 1ம் தேதி பிற்பகல் அடுத்தடுத்து 2 டைம்பாம் வெடித்தது. இதில் 10பேர் காயமடைந்தனர். குண்டு வைத்தவன் அந்த ஓட்டலில் ரவா தோசை சாப்பிட்டு விட்டு குண்டு வைத்து விட்டு சென்று உள்ளான். இது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளைக்கொண்டு போலீஸ், மற்றும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களைக்கொண்டு என்ஐஏ அதிகாரிகள் இன்று சென்னை முத்தையால்பேட்டை, பிடாரியார் கோயில் தெருவில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோல ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலும் சோதனை நடக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 இடங்களில் சோதனை நடக்கிறது. தமிழ்நாடு தவிர மேலும் 6 மாநிலங்களிலும் என்ஐஏ சோதனை நடத்துகிறது.