திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் ( 33) சாப்ட்வேர் என்ஜினியர் இவரது மனைவி யுவஸ்ரீ ( 30) சென்னை லண்டன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சென்னையில் வேலை காரணமாக குடி போக முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்று நவல்பட்டில் உள்ள வீட்டில் உள்ள பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.அப்போது கணவன் மனைவி இருவரும் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு தாறுமாறாக ஓடிய கார் கணவன் மனைவி இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு யுவஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விமல் ராஜுக்கு உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை வீட்டுக்குள் உறவினர்களுடன் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
அந்தப் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதில் மது அருந்திக்கொண்டு காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
