ஆடி அமாவாசை தினமான நேற்று திருவரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு மத்தியில் பிச்சை எடுக்கும் கும்பல்களின் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான பெண்கள்30 முதல் 45 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் கையில் குழந்தைகளை வைத்திருந்தனர். அந்த குழந்தைகளை தோளில் போட்டவாறு பிச்சை எடுத்தனர்.
அந்த பெண்களை கூர்ந்து பார்த்தால், அந்த குழந்தைகளுக்கும், அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு வித மயக்கத்தில், பசி மயக்கமோ அல்லது வேறு என்ன மயக்கமோ தெரியவில்லை. சோர்வுடன் இருந்தது. அந்த குழந்தைகளை காட்டித்தான் இவர்கள் பிச்சை எடுத்தனர்.
அமாவாசை தினத்தில் மட்டும் குழந்தையுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மா மண்டபத்தில் பிச்சை எடுத்தனர். ஆனால் எந்த குழந்தையும் அம்மா என அந்த பெண்களை அழைக்கவுமில்லை. ஆசையாக சிரிக்கவும் இல்லை. ஏதோ ஒருவித மந்திர சக்திக்கு கட்டுப்பட்டது போல காணப்பட்டது.
இது குறித்து அந்த பகுதியில் விசாரித்தபோது இவர்கள் அனைவரும் பிச்சை எடுக்க குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வருபவர்கள் என அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். ஒரு குழந்தைக்கு ரூ.500 வீதம் கொடுத்து நாள்
வாடகைக்கு எடுத்து வருகிறார்களாம். அதாவது திருச்சியில் குழந்தைகளை பிச்சை எடுக்க வாடகைக்கு விடும் பயங்கர தகவலும் வெளிவந்து உள்ளது.
இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து வருகின்றனர், 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா மண்டபத்திற்கு வரும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து சைல்ட் லைன் அமைப்புக்கு புகார்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகளை வாடகைக்கு விடும் நபர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசாரும் வலைவிரித்திருப்பதாக கூறப்படுகிறது.