திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில்
நகராட்சி நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.12,449.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, ஸ்ரீரங்கத்தில் ரூ.1110 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், ரூ.125 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, 2000 பயனாளிகளுக்கு
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா மற்றும் ரூ.176 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவும் அதில் நடைபெற்றது.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்
கே.என்.நேரு முடிவடைந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டாக்களை நல திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருச்சியின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 2600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். திருச்சியில் புதிய சாலைகள், உயர் மட்ட பாலம், கிராமங்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்கிற சட்டம் இருந்தது கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அதனை மாற்றி அனைவருக்கும் பட்டா வழங்க உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 45 கோடியில் கூட்ட அரங்கம் கட்ட உள்ளோம்.
திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் அதற்கான பணிமளையும் முன்னெடுத்து வருகிறோம்.
திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி, முசிறி, மணப்பாறை, துறையூர் தொகுதிகளில் கூட்டு குடி நீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 107 இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 7 1/2 கோடி பேருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும்.
சுதந்திரம் பெற்ற பின்பு 70 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மட்டுமே கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு கூட்டு குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள், பட்டா உள்ளிட்டவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றார்.