Skip to content
Home » திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் . இவரது வாகனத்தினை விராலி மலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2001 ம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.

மேற்படி ரங்கசாமி பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை பார்த்திபனுக்கு தெரியாமல் விற்றுவிட்டார். இதனை அறிந்த பார்த்திபன் ரங்கசாமி மீது கடந்த 19.3.2022 அன்று ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்து தனது ஜேசிபி இயந்திரத்தை திரும்ப பெற இயலாத பார்த்திபன் உயர் நீதிமன்றத்தினை நாடி வழக்கு தொடுத்துள்ளார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் பார்த்திபனிடம் 5 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பு சான்றிதழ் மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு இயந்திரத்தை பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே பார்த்திபன் சொத்துமதிப்பு சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6.7.2023 அன்று விண்ணப்பம் செய்து அந்த மனுவானது கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலரிடம் வந்தது. இதனை அறிந்த பார்த்திபன் நேற்று 24.7.23 காலை 10 மணிக்கு கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்பு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய கோரியுள்ளார்.

அதற்கு கண்ணூத்து விஏஓ அமீர்கான் 6000 லஞ்சமாக கொடுத்தால் சொத்து சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். பார்த்திபன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்து கொண்டு 5000 கொடுத்தால் மட்டுமே சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய முடியும் என்று விஏஓ அமீர்கான் கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள்  சக்திவேல்  சேவியர் ராணி , பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசாருடன் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பெயரில் பார்த்திபன் கண்ணூத்து ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று 25.7.23 காலை சுமார் 11 மணியளவில் சென்று விஏஓ அமீர் கானிடம்  ரூபாய் 5000 லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!